வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தனது பிடிவாதத்தை தளர்த்தவில்லை.
இதனால் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இறங்கி வர மறுக்கிறார்.
வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், ஊதிய உயர்வு தர வேண்டும், போக்குவரத்துக்கழகத்தை முழுவதுமாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டம் வெடித்தது.
நிதி இல்லை
போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்க அரசிடம் போதிய நிதி இல்லை என பலமுறை சந்திரசேகர ராவ் எடுத்துக்கூறி பார்த்தார். அவர்கள் கேட்பதாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர், ஒரே நாளில் 48,000 போக்குவரத்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
48000 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரே நாளில் வேலை காலி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆர் அதிரடி!
கோபம்
சந்திரசேகர்ராவின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசுப் போக்குவரத்துகழக ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்தச்சம்பவம் போக்குவரத்துக் கழக ஊழியர்களை மேலும் கொதிப்படையச் செய்தது. அரசுக்கு அடிபணிவதில்லை என்ற முடிவில் உறுதியாக இன்று வரை உள்ளனர்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் நிலைமை மோசமடைந்து வருவதை உணர்ந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொள்ளலாம், போராட்டம் வேண்டாம் என போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அனைவரும் பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார்.
விருப்பமில்லை
இதனிடையே அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் சந்திரசேகர்ராவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
சர்ச்சை கருத்து
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்த்தால், அவரோ வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு வீட்டில் பொழுதை கழிப்பவர்களுடன் நான் ஏன் பேச வேண்டும் எனக் கூறி முறுக்கிக்கொண்டு நிற்கிறார்.