நீதான் கட்சியோட செயல் தலைவர்.. மகனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது மகன் கேடிஆரை டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வரும்,தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராம ராவ். இவர் தெலுங்கானாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளார். மேலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்
கேடிஆர், கட்சி மற்றும் ஆட்சியில் நம்பர் 2வாக உள்ளார். அவரை தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவராக நியமித்து சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேடிஆரின் பணியாற்றும் திறன், வழிநடத்தி செல்லும் பண்பு, ஆகியவற்றின் காரணமாக, அவரது தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி இரண்டாவது முறையாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல்வராக பொறுப்பேற்கிறார். அவரது ஒரே மகனான கேடிஆர் சிர்சில்லா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைச்சரவையில் கடந்த முறை வகித்த ஐடி துறை அமைச்சர் பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவராக கேடிஆரை, சந்திரசேகர் ராவ் நியமித்ததன் மூலம், இனி அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இவர் கைகோர்க்க வாய்ப்பு இல்லை என்கிற நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா பாணியில், லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் உள்ள 17 தொகுதியிலும் வென்று பலமான கட்சியாகவும், தேசிய அரசியலில் வலுவான தலைவராகவும் மாறுவதுக்கு சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.