பரபரக்கும் தெலுங்கானா தேர்தல்.. களத்தில் 3 முக்கிய கட்சிகள்.. என்ன நடக்கும்?
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் சோதனையான தேர்தலாக இருக்க போகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் சோதனையான தேர்தலாக இருக்க போகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு சில மாதம் முன் பதவி விலகினார். இதனால் அங்கு ஆட்சி கலைந்தது. அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு தேர்தல் குறித்த கூட்டணிகள், விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டது.
தெலுங்கானாவில் இரண்டு முனை போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணியும் இந்த தேர்தலில் மோத உள்ளது. இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பை விட இப்போது ஆதரவு குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளது. தெலுங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று தகவல் வருகிறது.
மாறாக இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் பிரபலமாக இருந்தாலும் தெலுங்கானாவில் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை. இதனால் தெலுங்கானாவில் போட்டியிட்டு பெயரை கெடுத்துக் கொள்வதற்கு பதில், பின்பக்கம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேலை செய்ய வாய்ப்புள்ளது.
பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இதேபோல்தான். அந்த கட்சிக்கும் தெலுங்கானாவில் பெரிய வரவேற்பு இல்லை. அதேபோல் இந்த கட்சி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு அவ்வப்போது ஆதரவாக பேசுவதால், அந்த கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்கவும் வாய்ப்புள்ளது.
இது தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய இடியாக மாறியுள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.