அட பாவமே.. தெலுங்கானாவில் இந்த நிலையா?.. தென்னிந்தியாவில் எங்குமே தாமரை மலராது போல!
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
தெலுங்கானாவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ''பீப்பிள் பிரண்டிற்கும்'' , தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஆனால் பாஜக கட்சி அங்கு மிக மோசமான தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் அங்கு மீதம் இருக்கும் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கணிக்கிறார்கள்.
தற்போது என்ன நிலவரம்
தற்போது தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 89 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை வகிக்கிறது. 16 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
தென்னிந்தியா சிம்ம சொப்பனம்
இதுவரை வந்த முடிவுகளின்படி தென்னிந்தியா பாஜகவிற்கு எப்போதும் சிம்ம சொப்பனம்தான் என்று நிரூபித்து இருக்கிறது. அகண்ட பாரத் கனவில் இருக்கும் பாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதும் எட்டா கனியாகவே உள்ளது. தெலுங்கானா மூலம் உள்ளே வரலாம் என்று நினைத்த பாஜகவிற்கு இது பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
யோகி ஆதித்யநாத்
எப்போதும் பாஜக சார்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தால் அங்கு பாஜக கட்சி வெற்றிபெறும். குஜராத் சட்டமன்ற தேர்தலில் யோகி பிரச்சாரம் செய்த அனைத்து தொகுதியிலும் பாஜக வென்றது. ஆனால் தென்னிந்தியா இதிலும் வித்தியாசம் காட்டியுள்ளது. தெலுங்கானாவில் யோகி பிரச்சாரம் செய்த பகுதிகளில் பாஜக படுமோசமான தோல்வியை நோக்கி செல்கிறது.
மிக மோசமாக ஹைதராபாத்
அதேபோல் ஹைதராபாத்தில் பாஜக மிக மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறது. முக்கியமாக பாஜகதான் ஹைதராபாத் பெயரை மாற்றுவோம், தேர்தலில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் மிக மோசமான பின்னடைவை பாஜக சந்தித்து உள்ளது.
சென்ற தேர்தல் கதை
தெலுங்கானாவில் நடந்த சென்ற தேர்தலிலும் பாஜக இதேபோல்தான் மோசமாக தோல்வியை தழுவியது. தெலங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் உள்ளது. சென்ற தேர்தலில் அங்கு 90 இடங்களில் வென்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது. தெலுங்கு தேசம் 1 இடத்தில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்தில் வென்றது. பாஜக 5 இடங்களில் வென்றது. இந்த முறையில் அதைவிட பாஜக குறைவாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாநிலங்கள்
அதேபோல் பாஜக மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் இதே முடிவைதான் இதற்கு முன் சந்தித்தது. தமிழகத்திலும், கேரளாவிலும் பாஜகவிற்கு இடம் இல்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கோட்டை வலுவாக நிற்கிறது. கர்நாடகாவில் கைக்கு எட்டிய ஆட்சி வாய்க்கு எட்டவில்லை. தற்போது தெலுங்கானாவில் மாபெரும் தோல்வியை நோக்கி செல்கிறது. இதனால் தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.