2 ஆண்டுகளாக 2 குழந்தைகள், மாமியாருடன் கழிப்பறையில் தங்கியிருக்கும் பெண்.. கண்ணீர் மல்க பேட்டி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தினக் கூலியாகப் பணியாற்றி வருகிறார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
சுஜாதாவின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலம்
இந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், சுஜாதா தஞ்சமடைந்தார். அங்கிருந்தும் சில நாட்களில் அவர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர்.
இடமின்றி தவித்த சுஜாதா
வசிப்பதற்கு இடமின்றித் தவித்த சுஜாதா, அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றி கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கழிப்பறையில் அமைந்திருந்த மலம் கழிக்கும் பகுதியை கடப்பா கல் வைத்து மறைத்து வைத்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்
மேலும் அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார். 2 ஆண்டுகளாக 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் உள்ளே
இதுகுறித்து சுஜாதா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தூங்குவோம். 2 குழந்தைகள் உள்ளே தூங்குவார்கள். மழை காலங்களில் குழந்தைகளை உள்ளே தூங்க வைத்துவிட்டு, நான் தூங்கவே மாட்டேன். கூரையின் கீழ் உட்கார்ந்திருப்பேன்.
கழிப்பறைக்கு
எங்களின் நிலைமை யாருக்கு புரியும். முதல்வர் வாக்குறுதி அளித்த இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு எங்கே என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சுஜாதா வசித்து வந்த கழிப்பறைக்கு அருகிலேயே அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. வீடு கட்ட அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை நடந்தது. இன்னமும் அவர்கள் கழிப்பறையிலேயே குடி இருந்து வருகிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதாவது ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்தவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச இரு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் கட்டித் தருவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் உறுதியளித்ததார்.