சமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் மேஜிக் அரிசியை விளைவித்து நல்ல அறுவடையை பார்த்துள்ளார். இந்த அரிசியின் குணாதிசயம் என்னவெனில் இதை சாதமாக அடுப்பில் வைத்து தயார் செய்ய தேவையில்லை. சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதும் சாதம் ரெடியாகிவிடும்.
போகா சவுல் அரிசி என்பது அஸ்ஸாம் மாநில காடுகளில் கிடைக்கக் கூடியதாகும். இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த அரிசிக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. இந்த அரிசியை தெலுங்கானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த்
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் இல்லந்தகுண்ட மண்டலத்தின் ஸ்ரீராமுலா பாலியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். விவசாயத்தில் தனித்துவமாக செய்ய வேண்டும் என ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் அஸ்ஸாம் சென்றார். அங்கு கவுஹாத்தி பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது வேளாண்டமை துறையின் உதவியுடன் போகா சவுல் அரிசி குறித்து தெரிந்து கொண்டார்.
ஊற வைத்தால் போதும்
இந்த அரிசியை சமைக்கவே வேண்டாம். அப்படியே ஊற வைத்தால் போதும், சாதமாகிவிடும். இது அஸ்ஸாமின் சில பகுதிகளிலும் நல்பரி, பார்பேட்டா, கோல்பாரா, கம்ரூப், டாரங், துப்ரி, சிராங், போங்கியாகோவன் போன்ற மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு வகையான நெல்லாகும்.
5 மூட்டை விளையும்
இந்த நெல்லை தெலுங்கானாவில் தனது நிலத்தில் 0.05 ஏக்கரில் சிறிய அளவில் பயிரிட்டார் ஸ்ரீகாந்த். சுமார் 145 நாட்கள் இதன் அறுவடை காலம் ஆகும். இந்த சிறிய இடத்தில் பயிரிட்டதன் மூலம் 5 மூட்டை விளைச்சலை இது கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். இது போன்ற சிறப்பான நெல் வகையை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகளாக முயற்சித்ததாக கூறுகிறார் ஸ்ரீகாந்த்.
பரிசோதனை
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் சாதாரண நெல் உள்ளது. இதனை நான் முதலில் பரிசோதனை செய்த போது நன்கு ஊற வைக்கவே அரை மணி நேரம் ஆனது. சூடான நீரை பயன்படுத்தினால் அரிசி சூடாகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்தினால் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.
வாழைப்பழம்
இது பார்ப்பதற்கு பொரி போல் இருக்கிறது. வெல்லம், வாழைப்பழம், தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருந்தது என்றார். இதில் 10.73 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 6.8 சதவீதம் புரதம் உள்ளது. இதுபோல 120 அரிய வகை இனங்களை ஸ்ரீகாந்த் பயிரிட்டு வருகிறார். இதன் பிசுபிசுப்புத் தன்மையால் அஹோம் பகுதியில் வாத்து முட்டையுடன் சேர்த்து கட்டடங்களை கட்ட இந்த அரிசி பயன்படுத்தப்பட்டது.