ஓம் டிரம்ப்பாய நமஹா.. டொனால்டாய நமஹ.. தெலுங்கானாவை கலக்கும் டிரம்ப் கிருஷ்ணா கோவில்!
டிரம்புக்கு சிலை வைத்து வழிபடுகிறார் தெலுங்கானா விவசாயி ஒருவர்
ஹைதராபாத்: எதற்கெடுத்தாலும் போராட்டமா என்று ரஜினிகாந்த் அன்று ஆவேசமாக கேட்டார். ஆனால் இன்று எதற்கெடுத்தாலும் கோவில் கட்ட ஆரம்பித்து விட்டார்கள் நம்மவர்கள். அதாவது டிரம்ப்புக்கும் கோவில் கட்டி விட்டார்கள்.
குஷ்புவுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமி இது. இதே மண்ணில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டார். ஆனால் தெலுங்கானாவில் ஒருவர் ஒரு படி மேலே போய் சர்வதேச லெவலுக்கு மாறி விட்டார். அதாவது அமெரிக்க அதிபருக்கே கோவில் கட்டி விட்டார்.
அதாவது டிரம்ப் கிருஷ்ணா என்பது இந்தக் கோவிலுக்கு அவர் வைத்துள்ள பெயர். கோவிலைக் கட்டியவர் பெயர் புஸ்ஸா கிருஷ்ணா என்பதாகும். இவர் டிரம்ப்போட தீவிர ரசிகராம். இதனால் தெலுங்கானாவில் உள்ள ஜங்கோவன் என்ற இடத்தில் கோவில் கட்டி தினசரி வழிபாடும் செய்து வருகிறார். இப்போது இவரது ஆசை என்னவென்றால் இந்தியா வரும் டிரம்ப்பை எப்படியாவது தான் சந்திக்க வேண்டும் என்பதுதானாம். மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
டிம்ப்க் கிருஷ்ணா கோவில் குறித்து புஸ்ஸா கிருஷ்ணா கூறுகையில், இந்தியா அமெரிக்கா இடையே உறவு வலுப்பட வேண்டும். டிரம்ப் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் விரதம் இருப்பேன். மேலும் எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் முதலில் டிரம்ப் படத்தை தொட்டு வணங்கி விட்டுத்தான் ஆரம்பிப்பேன்.
அவரை சந்திக்க ஆசையாக இருக்கிறது. இந்தியாவுக்கு டிரம்ப் வரவுள்ளார். அவரை சந்திக்க எனக்கு அனுமதி தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். எனது கனவை மத்திய அரசு நனவாக்க வேண்டும். என்று கூறுகிறார் புஸ்ஸா கிருஷ்ணா. தனது வீட்டின் அருகே 6 அடி உயரத்துக்கு டிரம்ப் சிலையை வைத்து கோவிலாக்கியுள்ளார் இந்த புஸ்ஸா கிருஷ்ணா. தினசரி வழிபாடும் நடக்கிறது. பாலாபிஷேகமும் உண்டு.
இந்த கோவிலை உருவாக்கி முடிக்க ஒரு மாதமானதாம். 15 பேர் சேர்ந்து இந்த சிலையை உருவாக்கினார்களாம். இப்போது எல்லோரும் புஸ்ஸா கிருஷ்ணா வீட்டை டிரம்ப் ஹவுஸ் என்றே செல்லமாக அழைக்கிறார்கள். பிப்ரவரி 24ம் தேதி தனது மனைவி மெலனியாவுடன் இந்தியாவுக்கு வருகிறார் டிரம்ப். 2 நாள் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார். அந்த சமயத்தில் டிரம்ப்பை சந்திக்க புஸ்ஸாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது அவரது கனவு புஸ்ஸாகுமான்னு பார்க்கணும்.