ரத்த புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமி.. தெலுங்கானாவில் ஒரு நாள் கவுரவ ஆணையரானார்!
ஹைதராபாத்: கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒரு நாள் கவுரவ காவல் துறை ஆணையராக இருந்தார்.
தெலுங்கானா மாநிலம் ரச்சகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவரது மகள் ரம்யா (17). இவர் மேட்சல் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏராளமான அறக்கட்டளைகளும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் மேக் ஏ விஷ் என்ற தொண்டு நிறுவனம் ரம்யாவின் ஆசையை கேட்டது.
விவரம்
அதற்கு ரம்யா காவல் துறை ஆணையர் ஆவதே தனது விருப்பம் என கூறியிருந்தார். சிறுமியின் ஆசையை அறிந்த தொண்டு நிறுவனத்தினர் ரச்சகொண்டா காவல் துறை ஆணையர் மகேஷ் பகவத்தை சந்தித்து விவரத்தை தெரிவித்தனர்.
மகேஷ் பகவத்
இதையடுத்து ரம்யாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்தார் மகேஷ் பகவத். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கமிஷனருக்கான உடை அணிந்து கொண்டு மகேஷ் பகவத்தின் இருக்கையில் அமர்ந்தார்.
நண்பர்
அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் கோப்புகளை பார்வையிட்டார். இதுகுறித்து ரம்யா கூறுகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்கும். ரச்சகொண்டா கமிஷனர் அலுவலகம் காவல் துறை உங்கள் நண்பன் என்பது போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.
அன்பளிப்பு
கமிஷனர் பதவிக்கு நல்ல பெயரை பெற்று தருவேன். இந்த இருக்கையில் அமர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ரம்யா விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என கமிஷனர் மகேஷ் பகவத் மற்றும் கூடுதல் கமிஷனர் சுதீர் பாபு ஆகியோர் வாழ்த்தி ரம்யாவுக்கு சிறிய அன்பளிப்பை கொடுத்தனர். உடன் அவரது தாய் இருந்தார்.
|
நிறைவேற்றம்
ரச்சகொண்டாவின் ஒரு நாள் கவுரவ கமிஷனராக இருந்த ரம்யா 2-ஆவது நபராவார். இவருக்கு முன்னாள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஈசான் என்பவரின் ஆசையை இந்த அலுவலகம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.