“மோடி ஜி.. இந்த மேட்டர் என்னாச்சு?”- 17 இடங்களில் திடீரென முளைத்த மர்ம பேனர்கள்.. யார் பார்த்த வேலை?
ஐதராபாத் : பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வருவதற்கு முன்னதாக தெலுங்கானாவிற்குச் சென்றிருந்தார். ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவரை வரவேற்கச் செல்லவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வருவதற்கு முன்பே அவருடனான சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று காலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவில் இல்லாவிட்டாலும், பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பி டி.ஆர்.எஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
டி.ஆர்.எஸ் - பாஜக மோதல்
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்.எஸ் கட்சிக்கும், பா.ஜ.க விற்கும் இடையே தீவிர மோதல் போக்கு இருந்து வருகிறது. பாஜகவிற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வருகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தெலுங்கானா சென்ற போதும் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார் சந்திரசேகர் ராவ். நேற்றும் அவர் வருவதற்கு முன்பே பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
பெங்களூரில்
பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மகன் குமாரசாமி ஆகியோரை நேற்று சந்தித்துள்ளார் சந்திரசேகர் ராவ். பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கே.சி.ஆர். அதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்தவகையிலேயே நேற்றும் பெங்களூருக்கு சென்று தேவ கவுடாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
17 இடங்களில் பேனர்கள்
இதற்கிடையே, பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா வந்த போது ஐதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் தெலுங்கானா மாநிலத்திற்கான திட்டங்களின் நிலை குறித்த 17 கேள்விகளுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த பேனர்களில் யார் வைத்தது என எந்தக் குறிப்பும் இல்லை. மோடிக்க்கு கேள்வி எழுப்பி ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
2016ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் தெலுங்கானாவுக்கு மருத்துவ பல்கலைக்கழகம் ஒதுக்கப்படாதது குறித்தும், ராணுவ தளவாட தொழிற்சாலையை தெலுங்கானாவில் அமைக்காதது குறித்தும், ஐதராபாத்தில் இயங்கிய பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது கேள்வி எழுப்பி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
திட்டங்கள் என்ன ஆனது?
மேலும், பாலமுரு - ரங்காரெட்டி திட்டம் ஆகியவை தேசிய திட்டங்களாக அங்கீகரிக்கப்படாதது குறித்தும், நிஐமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைக்காதது ஏன்? தெலுங்கானாவுக்கு நவோதாயா பள்ளிகளை அளிக்காதது ஏன் என்பது உட்பட 17 கேள்விகள் பேனர்களில் இடம்பெற்று இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்துள்ளார்.
மர்ம பேனர்கள்
நகரின் முக்கியப் பகுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பிரதமருக்கு நினைவூட்டும் வகையில் பல கேள்விகளுடன் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பேனர்களை வைத்தவர் யார் என்கிற விபரங்கள் இல்லாவிட்டாலும், ஆளும் டிஆர்எஸ் கட்சியினரே இந்த பேனரை வைத்ததாக பரவலாகப் பேசப்படுகிறது.