படுத்தப்படுக்கையான தாய்.. பராமரிக்க ஆள் இல்லை.. படுக்கையோடு எரித்த மகன்.. தெலுங்கானாவில் சோகம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் லாக்டவுனால் வேலையை இழந்த மகன் படுத்தப்படுக்கையாக இருந்த தாயை கவனித்துக் கொள்ள முடியாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தின் நரசிங்கபட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலா லிங்கசாமி (45). இந்த கிராமம் ஹைதராபாத்திலிருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவர் கட்டுமான தொழிலாளி ஆவார்.
தற்போது லாக்டவுனால் வேலையை இழந்தார். இவரது தாய் சாந்தம்மா (65). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரூமில் இருந்து கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு உடைந்து படுத்தப்படுக்கையாகிவிட்டார்.
பிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி!
லிங்கசாமி
இவரை கவனித்துக் கொள்ள அவரது பெண்கள் மறுத்துவிட்டதால் இவரை லிங்கசாமி ஆள் வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் லாக்டவுனால் சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த லிங்கசாமி அந்த பராமரிப்பாளருக்கு ஊதியம் கொடுக்காததால் அவர் வேலையை விட்டு நின்றுவிட்டார்.
துர்நாற்றம்
இந்த நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சாந்தம்மாவுக்கு உணவு கொடுத்து வந்தார்கள். நாளடைவில் அவர் சிறுநீர், மலம் ஆகியவற்றை படுத்தப்படுக்கையிலேயே கழிப்பதால் அவரை சுற்றி துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் அக்கம்பக்கத்தினரும் உணவு கொடுக்க வர மறுத்துவிட்டனர். இவர்களது பக்கத்து ஊரில் வசிக்கும் மகள் எப்போதாவது வந்து தாயை சுத்தப்படுத்தி குளிப்பாட்டி விட்டு செல்வார்.
பணம் இல்லை
இதனிடையே லிங்கசாமி எப்படியோ தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு தாயை பார்த்து கொள்ள யாரும் இல்லாததை எண்ணி வேதனை அடைந்தார். பராமரிப்பாளரை பணியமர்த்த தன்னிடம் பணம் இல்லை. சரி சகோதரிகளை அழைத்தாலும் அவர்கள் வர மறுத்துவிட்டார்கள்.
தாயை எரித்து கொன்ற மகன்
இதனால் கொஞ்ச நாட்கள் தன்னால் முடிந்த பணிவிடைகளை செய்து வந்தார். இதையடுத்து கடமையை தட்டிக் கழிப்பதாக குற்றம்சாட்டி தனது சகோதரிகளுடன் அவர் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தாயை கவனித்துக் கொள்ள முடியாத விரக்தியில் இருந்த லிங்கசாமி மண்ணெண்ணெய் ஊற்றி படுக்கையோடு தாயை எரித்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
சகோதரிகள் வாக்குமூலம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது சகோதரிகளிடம் கேட்டபோது நிதி நெருக்கடியை சமாளிக்க வீட்டை விற்று தருமாறு தாயிடம் கேட்டு லிங்கசாமி கேட்டு வந்தார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அதனால் தற்போது கொலை செய்யவும் துணிந்துவிட்டார் என வாக்குமூலம் அளித்தனர். மேலும் அவரது மனைவியுடனும் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அவரது 2 வயது குழந்தையை அழைத்து கொண்டு லிங்கசாமியை விட்டு சென்றுவிட்டதாகவும், லாக்டவுன் நேரத்தில் மது குடித்தே காசை அழித்ததாகவும் சகோதரிகள் குற்றம்சாட்டினர்.