தெலுங்கானா அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் இல்லை.. இறந்த மகளை கையில் சுமந்து சென்ற தந்தை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தந்தை கையில் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமலா. இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
இவரை சிகிச்சைக்காக கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சம்பத் கொண்டு வந்து சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் இல்லை
கையில் பணமில்லாததால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் இல்லை என தெரிவித்துவிட்டனர்.
ஓட்டுநர்கள்
இதனால் இன்று நீண்ட நேரம் மருத்துவமனையிலேயே அமர்ந்த சம்பத், செய்வதறியாது கையிலேயே கோமலாவை சுமந்தபடி கண்ணீருடன் நடந்தே சென்றார். அப்போது மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் தன் நிலைமையை கூறினார்.
கண்கலங்க வைத்த சம்பவம்
அதற்கு பலர் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஒப்புக் கொண்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சம்பத்தை சொந்த ஊரில் விட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
பொத்தப்பள்ளி மாவட்டம்
தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டமான பொத்தப்பள்ளி ஆம்புலன்ஸ் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.