4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு
ஹைதராபாத்: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது அவர் செய்த ஊழல்களை ஜெகன்மோகன் ரெட்டி அரசு விசாரணை நடத்தி வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்பதால் தன் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்பிக்களை பாஜகவுக்கு அணி மாறுமாறு நாயுடு நிர்பந்தித்து அவ்வாறே அனுப்பியுள்ளதாக தெலுங்கானா மாநில அரசு பகீர் தகவலை அளித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவையில் பாஜக பெரும்பான்மை பலமுடன் இருந்தது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பலம் குறைவாகவே இருந்தது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது மாநில எம்எல்ஏக்களை பொருத்து தேர்வு செய்யப்படுவதால் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி ஏற்படாததால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.
பாஜகவின் பலம்
அது போல் இந்த முறையும் மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக ராஜ்யசபாவிலும் பாஜகவின் பலம் கூடி வருகிறது.
4 எம்பிக்கள்
இது எப்படி என்பது குறித்து தெலுங்கானா மாநில கால்நடைத் துறை அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் பகீர் தகவலை அளித்துள்ளார். அவர் கூறுகையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் சுஜானா சவுத்ரி, சிஎம் ரமேஷ், கரிகாபட்டி ராம்மோகன் ராவ் மற்றும் டிஜி வெங்கடேஷ் ஆகியோர் ஆவர்.
மிரட்டல்
இவர்கள் 4 பேரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த 4 பேரும் பாஜகவுக்கு அணி மாறினர். இதை அவர்கள் விரும்பி செய்யவில்லை. நாயுடுவே தனது சுயலாபத்துக்காக அவர்களை பாஜகவுக்கு அணி மாற நிர்பந்தித்துள்ளார்.
நடவடிக்கை
நாயுடுவின் ஆட்சி காலத்தில் மிகப் பெரிய ஊழல்கள் நடந்துள்ளன. இந்த நால்வரும் நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களுக்கு நிதி மற்றும் அரசியல் நிலை குறித்து ஒவ்வொன்றும் தெரியும். மேலும் தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு, நாயுடுவின் ஊழல்கள் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தும் என்பது நாயுடுவுக்கு தெரியும். மேலும் தமது வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படுவதும் தெரியும்.
பலத்தை பெருக்க
அந்த சமயத்தில் பாஜகவின் உதவி நாயுடுவுக்கு நிச்சயம் தேவைப்படும் என்பதால் தங்கள் கட்சியின் எம்பிக்களை பாஜகவுக்கு அணி மாற வைத்ததன் மூலம் ராஜ்யசபாவில் பாஜக அரசின் பலத்தை பெருக்க உதவியுள்ளார் என்றார் யாதவ்.