தெலுங்கானா சட்டசபை தேர்தலிலும் 'வந்தேறிகள்' கோஷம்.. ஆந்திர தலைவர்களுக்கு 'ஆப்பு'
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில காபந்து முதல்வருமான சந்திரசேகரராவ் வந்தேறிகள் கோஷத்தை கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சீனியர் தலைவர் மற்றும் அமைச்சரான ஹரிஷ் ராவ் கூறுகையில், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மக்களுக்கும் எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் ஆந்திராவிலிருந்து வரும் தலைவர்கள் தெலுங்கானாவின் தனித்துவத்திற்கு ஆபத்தானவர்கள்.
ஆந்திராவிடம் அடிமையா
காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து செயல்படுகிறது. ஆனால், தெலுங்கானா காங்கிரஸ் தலைவரான உத்தம் குமார் ரெட்டி ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் அரசியல் அறிக்கைகளை அளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, தெலுங்கானா மக்கள் விரும்ப மாட்டார்கள்.
தியாகம்
தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்ற போராட்டத்தில், உயிர்த் தியாகம் செய்தவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளோம். அதன் மூலம் உயிர்த் தியாகம் செய்தவர்கள் மீது சந்திரபாபு நாயுடு வைத்திருந்த அபிப்பிராயம் என்ன என்பது தெலுங்கானா மக்களுக்கு நினைவுக்கு வரும்.
இரு நிலைப்பாட்டில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் கூட தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் இருவேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தது. தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தனி மாநிலம் வேண்டும் என்றும், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள் அது வேண்டாம் என்றும் தெரிவித்து வந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வந்தேறிகள்
இதன்மூலம் வந்தேறிகள் என்ற வாதத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்வைக்கப்போகிறது, இதன்மூலம் சந்திரபாபு நாயுவிற்கு எதிராக, தேர்தல் ஆதாயம் பெற முயற்சிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வந்தேறிகள் என்ற தேர்தல் கோஷம் முன் வைக்கப்படுவது பரவலாகியுள்ளது நினைவிருக்கலாம்.