அதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தண்ணீர் செலவை மிச்சப்படுத்துவதற்காக ஹாஸ்டலில் தங்கி பள்ளியில் படித்த சுமார் 180 மாணவிகளின் தலை முடியை தலைமை ஆசிரியர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெதக் நகரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்பட அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பள்ளியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆள்துறை கிணறு வறண்டுவிட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் மூன்று நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி தண்ணீர் பள்ளிக்கு வருகிறது. இதற்கு அதிக செலவாகி வந்துள்ளது.
இந்நிலையில் மாணவிகள் குளிப்பதால் தான் அதிக தண்ணீர் செலவாகுவதாக தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி நினைத்தார். மேலும் மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீரை பயன்படுத்துவதாகவும் அவர் கருதினார்.
முத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்!
இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட உத்தரவிட்டார். இதனால் அனைவருக்கும் முடி வெட்டப்பட்டது. மாணவிகள் அனைவரும் கிராப் தலைக்கு மாறினார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் ஹாஸ்டலுக்கு வந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகளின் முடி வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.