மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்
ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளாவை பின்பற்றி பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற இத்தீர்மானங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேக ராவ் நீண்ட மவுனம் காத்து வந்தார்.
தற்போது மவுனத்தை கலைத்துள்ளார் சந்திரசேகர ராவ். சி.ஏ.ஏ. குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது:
118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்
இந்தியா என்கிற நாடு மக்களுக்கானது. மதங்களுக்கானது அல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் 100% தவறான முடிவு. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்.
இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களிடமும் பேசியிருக்கிறேன்.
இதுவரை 16 மாநில முதல்வர்களிடம் சி.ஏ.ஏ. குறித்து பேசியிருக்கிறேன். சில மாநில கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி இருக்கிறேன். அனைவருமே சி.ஏ.ஏ. குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
ஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மாநில முதல்வர்களின் மாநாடு விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.