அமித்ஷாவுக்கு ஓவைசி சவால்! நான் ரெடி.. சிஏஏ குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா?
ஹைதராபாத்: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாரா என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி சவால் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் லக்னோவில் செவ்வாய்கிழமை(ஜன21) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது.
திரும்ப பெறப்படாது
இதில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது தொடர்ந்து பேசிய அமித் ஷா, எதிர்கட்சிகள் ஓட்டுவங்கி என்ற திரையால் கண்களை மறைத்துக்கொண்டுள்ளனர். அதனால் அவர்களால் உண்மையை காண முடியாது.
எதிரக்கட்சிகள்
ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாட்டின் எந்த பகுதியில் வைத்தும் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? குடியுரிமை திருத்த சட்டத்தில் ஒருவரது குடியுரிமையை பறிக்கும் ஏதாவது ஒரு அம்சத்தை அவர்கள் எனக்கு காட்டட்டும். எதிர்ப்புகளை கண்டு ஒருநாளும் நான் பயப்பட மாட்டேன். எத்தகைய போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது" என்றார்.
விவாதிக்க தயாரா
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அமித் ஷா தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசாதுதின் ஓவைசி, நீங்கள் என்னுடன் விவாதிக்க வேண்டும். நான் இங்கே இருக்கிறேன். அவர்களுடன் (ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி ஏன் விவாதம் செய்ய வேண்டும்? விவாதம் ஒரு தாடி வைத்த மனிதருடன் இருக்க வேண்டும். சி.ஏ.ஏ, என்.பி.ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவு) மற்றும் என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும்" என்றார்.
அமித் ஷாவுக்கு கேள்வி
முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டப்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் உள்பட 6 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாரபட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.