தெலுங்கானா சட்டசபையில் ஒலித்த குறள் இசை.. காரணம் தமிழிசை.. ஆஹா பேச்சு.. ஆரவார பாராட்டு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை திருக்குறள் வாசித்து குறிப்பிட்டார். அதை கேட்டு அம்மாநில எம்எல்ஏக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையை வாசித்தார். சட்டசபை சட்டமேலவை என இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் உரையை வாசித்தார்.
தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், செயல்திட்டங்கள், சாதனைகள் உள்பட பலவற்றை அவர் வாசித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தனது உரையை வாசிக்கும் முன்பு திருக்குறளை வாசித்தார். "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையம் சேரா தியல்வது நாடு" என்ற திருக்குறளை வாசித்தார். இதன் அர்த்தம் "நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்" என்பதாகும்.
Thirukkural in Telangana assembly courtesy of @DrTamilisaiGuv
— Damuloga seshadhri (@Karyakartadamu) March 6, 2020
👏🏼👏🏼👏🏼 pic.twitter.com/wm3t1RabNI
இந்த குறளின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் அவர் தெளிவாக சொன்னார் .இதை கேட்டு தெலுங்கானா மாநில எம்எல்ஏக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவரான தமிழிசைக்கு தமிழ் மீது அளவற்ற பற்று உள்ளவர். அவர் தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த மாநிலத்தின் சட்டசபையில் திருக்குறளை வாசித்து அதன் பெருமையை அந்த மக்களிடம் எடுத்து சென்றுள்ளார்.