"சர்கார்" எல்லாம் சினிமாவில்தான்.. நிஜத்தில் என்ன நடந்துச்சு பார்த்தீங்களா?
Recommended Video
ஹைதராபாத்: சர்கார் படம் பார்த்த ஒவ்வொருவரும் நேற்று நடந்த சம்பவத்தை இணைத்துப் பார்த்திருப்பார்கள். ஆனால் அதில் எத்தனை வித்தியாசம்.. மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்.
சர்கார் படத்தில் ஒரு காட்சி வரும். உலகின் மிகப் பெரிய பிரபலமான விஜய் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு வருவார். வந்த இடத்தில் அவரது ஓட்டை கள்ளஓட்டுப் போட்டு விடுவார்கள். அடடா வடை போச்சே என்று புலம்பிக் கொண்டு திரும்பாமல் சட்ட ரீதியாக போராடுவார் விஜய்.
தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் பந்தாடுவார். மக்களையும் தட்டி எழுப்பி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவார். நேற்றும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவத்தை ஹைதராபாத்தில் மக்கள் காண நேரிட்டது.
வாக்கு இல்லை
பிரபல பேட்மிண்டன் சாம்பியன் ஜூவாலா கட்டா. இவருக்கு ஹைதராபாத்தில் ஓட்டு உள்ளது. நேற்று நடந்த கடைசிக் கட்ட தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இவருக்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்ற தகவலை வாக்குச் சாவடி அதிகாரிகள் கூறவே அதிர்ந்து போனார்.
எங்கே போச்சு பெயர்கள்
கட்டா மட்டுமல்ல, அவரது தந்தை, சகோதரி ஆகியோரின் வாக்குகளும் கூட இல்லை,. இதனால் குடும்பமே அதிர்ந்து போனது. பெரும் ஏமாற்றத்துடன் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினார் ஜூவாலா கட்டா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருத்தத்துடன் ட்வீட்
தனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை குறித்து டிவீட் மூலம் பகிர்ந்து வேதனை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஜுவாலா. என் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை. இந்த தேர்தல் எப்படி நியாயமாக நடந்திருக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் புலம்பியுள்ளார்.
தேர்தல் அதிகாரி வருத்தம்
ஜுவாலா கட்டா டிவீட்டுக்கு தெலுங்கானா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டிலிருந்தே ஜுவாலாவின் பெயர் இடம் பெறவில்லை. அதை சேர்த்திருக்க வேண்டும். தவறி விட்டது. மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுப்போம். ஜுவாலாவுக்காக அனுதாபப்படுகிறேன் என்றார் ரஜத் குமார்.
அவ்வளவுதான் சாப்டர் குளோஸ்
நிஜத்தில் இதுதான் நடக்கும். தலைமைத் தேர்தல் அதிகாரி, மிஞ்சிப் போனால் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவிக்கும். அதற்கு மேல் எதுவும் நடக்காது. நாமும் புலம்பலுடன் டிவீட் அல்லது பேஸ்புக்கில் போட முடியும். அதற்கு மேல் நிவாரணம் எதுவும் நடக்காது, நடக்கவும் வாய்ப்பில்லை.