கரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி
ஹைதராபாத்: கரையில் மனைவி வீடியோ எடுத்த போது மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜனாகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபினாஷ் (31). இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி திவ்யா. இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர், மனைவி திவ்யா, மைத்துனிகள் சங்கீதா (19), சுமலதா (15) ஆகியோரை அழைத்து கொண்டு 10 கி.மீ. தூரத்தில் உள்ள பொம்மபூர் ஏரிக்கு சனிக்கிழமை மதியம் சுற்றுலா சென்றனர்.
வீடியோ
அப்போது கோடை வெப்பத்தை தணிக்க இவர்கள் 4 பேரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் திவ்யா கரை பகுதியில் நின்று கொண்டு இவர்கள் மூவரையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
ஆழமான பகுதி
அப்போது மாமா அபினாஷ் மீது மைத்துனிகள் இருவரும் தண்ணீரை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக அபினாஷ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
திவ்யா அலறல்
உடனே அவரை பின்தொடர்ந்து மைத்துனிகளும் சென்றனர். அப்போது அபினாஷ் மூழ்குவதையும் அவரது மைத்துனிகள் அவரை காப்பாற்ற முயற்சிப்பதையும் கண்ட திவ்யா அலறினார்.
திவ்யா மயக்கம்
பின்னர் அவரது அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கணவரின் உடலை பார்த்து திவ்யா மயக்கமடைந்தார். ஜாலியாக இருப்பதற்காக வந்த சுற்றுலா வீடியோ எடுத்த மோகத்தால் மூன்று பேரின் உயிரை பறித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.