தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இந்த கருத்து கணிப்புகளை பாருங்கள்!
ஹைதராபாத் : சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியே இந்த தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்எக்ஸ் எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் வெளியாகியுள்ளன.
தெலுங்கானாவில் முதல்வராக கே சந்திரசேகர ராவ் இருக்கிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சி அமைத்து வருகிறார். அதாவது அந்த ஆண்டுதான் அந்த மாநிலம் உருவானது.
கேசிஆரின் ஆட்சி அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. எனினும் கடந்த செப்டம்பரில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். அதன்படி கலைத்த ஆளுநர் தேர்தல் வரும் வரை முதல்வராக சந்திரசேகர ராவையே தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 119 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம்தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க டிஆர்எஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணியும் முயற்சித்து வருகிறது. இதையடுத்து டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்எக்ஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை எடுத்தது.
இதில் மொத்தமுள்ள 119 இடங்களில் தெலுங்கு ராஷ்ட்ரீய கட்சி 70 இடங்களில் வெற்றி பெறும். தெலுங்கானா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 60 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி 33 இடங்களை பெற்று இரண்டாவது இடத்துக்கு செல்லும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.