சந்திரமுகியைக் காணவில்லை.. தெலுங்கானாவில் பரபரப்பு!
தெலங்கானா வேட்பாளர் திருநங்கை சந்திரமுகி திடீர் மாயமாகி உள்ளார்.
ஹைதராபாத்: டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் சந்திரமுகியை காணவில்லை என்ற பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வரும் வர போகிற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போகிறார் சந்திரமுகி. 32 வயதான சந்திரமுகி ஒரு திருநங்கை ஆவார்.
கோஷமஹால் என்ற தொகுதியில் இவர் போட்டியிட முடிவு செய்து அதற்காக முறைப்படி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதே தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் முகேஷ் கவுடு, பாஜக தலைவர் டி. ராஜா சிங் போன்றோரும் களம் காண உள்ளனர்.
போலீசில் புகார்
இந்நிலையில் நேற்று விடிகாலை 3 மணியிலிருந்து வீட்டில் இருந்த சந்திரமுகியை காணவில்லை என்று கூறப்படுகிறது. சந்திரமுகிக்காக பிரச்சாரம் செய்த நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குடும்பத்தார்
யாரோ 2 பேர் வீட்டுக்கு வந்து பேச வேண்டும் என்று அழைத்து சென்றார்களாம். ஆனால் வீடு திரும்பவே இல்லையாம். சந்திரமுகிக்கு எத்தனையோ முறை போன் போட்டாலும் லைன் கிடைக்கவில்லையாம். அதனால் அவரை யாராவது கடத்தியிருப்பார்களா என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சந்திரமுகியை தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.
வெளிப்படையான பேச்சு
சந்திரமுகி என்பவர் வெறும் திருநங்கை மட்டும் கிடையாது. தேர்தலில் சந்திரமுகி வேட்பாளராக அங்கீகரிக்க நிறைய காரணங்கள் உள்ளன. மிகபெரிய போராளியும் கூட. ஹிஜிரா சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களை எதிர்த்து போராடி வருபவர்தான். பல சமூக மாற்றங்களை ஏற்படுத்த கூடிய பல பேரணிகளை முன்னெடுத்து நடத்தி வருபவர். எப்போது யார் என்ன கேட்டாலும் வெளிப்படையான பேச்சிலேயே அனைவரையும் ஈர்த்தவர்.
செல்வாக்கு அதிகம்
எப்போதுமே திருநங்கைகள் தங்களின் சுயமரியாதையை நிலைநிறுத்த வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்பவர். எங்கெல்லாம் சந்திரமுகி பிரச்சாரத்துக்கு போகிறாரோ, அங்கெல்லாம் இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.
கடத்தப்பட்டாரா?
இதுகூட ஒருவேளை அவர் கடத்தப்பட்டதற்கு காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு வேட்பாளரே மாயமாகி இருப்பது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.