நாட்டில் முதல் முறை...வாக்களிக்க லஞ்சம் கொடுத்த டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் ஜெயில்
ஐதராபாத்: தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகாபூபாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் மலோத் கவிதா. அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு தலா ரூ500 பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இந்த பணப்பட்டுவாடா செய்த சவுகத் அலி என்பவர் பறக்கும் படையினரிடம் பிடிபட்டார். வேட்பாளர் மலோத் கவிதாவுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் சவுகத் அலி.
நம்பள்ளி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை மலோத் கவிதாவும் ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கில்தான் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் நாட்டில் சிட்டிங் எம்.பி. ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.
இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக மலோத் கவிதாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.