கோவிலுக்குள் புகுந்த ஆமை.. அர்ச்சகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. இனி கொரோனா அழிஞ்சுருமாம்!
ஹைதராபாத்: விசா பாலாஜி கோயில் என அழைக்கப்படும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சில்குர் கோயிலில் ஆமை தோன்றியிருப்பதால் கொரோனா வைரஸை ஒழிப்பதில் தெய்வத்தின் தலையீடு இருக்கும் என அர்ச்சகர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சில்குரில் உள்ளது விசா பாலாஜி கோயில். வெளிநாடுகளுக்கு செல்ல விசா வேண்டி விண்ணப்பிப்போர் இங்கு வேண்டினால் விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதாவது விசா கிடைக்க 11 முறை கோயிலை சுற்ற வேண்டும். கிடைத்தவுடன் 108 முறை சுற்ற வேண்டும் என்பது நம்பிக்கையாகும்.
இங்கு கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. ஆனால் சுவாமிக்கான பூஜை புனஷ்காரங்களை அர்ச்சகர்கள் நடத்தி வருகிறார்கள்.
கருவறை
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் மூடப்பட்ட கோயிலை திறந்த அர்ச்சகர்கள் கோயிலின் கருவறையை திறந்தனர். அங்கு ஒரு ஆமை இருந்ததை கண்டனர். 10 செ.மீ முதல் 6 செ.மீ. வரை அந்த ஆமையின் அளவு இருந்தது. இது எப்படி வந்தது என்று தெரியவில்லை.
பாற்கடல்
சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது வெளியேறும் குழாய் கல் வழியாக இவ்வளவு பெரிய ஆமை உள்ளே வர வாய்ப்பே இல்லை. எனினும் கோயிலில் இருந்து வரும் எந்த ஒரு விஷயமும் தெய்வீகத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. பாற்கடலை ஆமை கடையும் போதுதான் அமுதம் கிடைத்தது. இதைத்தான் தேவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
கருவறை
இதுகுறித்து தலைமை அர்ச்சகர் சி எஸ் ரங்கராஜன் கூறுகையில் கோயிலுக்கு முன்னர் உள்ள கிணற்றுப்படிகளில் சில ஆமைகள் இருக்கின்றன. அது போல் கோயிலை சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் உள்ளன. ஆனால் ஒரு ஆமை படிகளில் ஏறி பூட்டப்பட்ட கோயிலுக்கு சென்று பூட்டப்பட்ட கருவறைக்கு செல்வது என்பது சாத்தியமற்றதாகும்.
கோவிட் 19
எனவே கருவறைக்குள் இந்த ஆமை வந்ததன் மூலம் கோவிட் 19 தொற்றுநோய்க்கு ஒரு தீர்வு காணப்பட்டுவிடும் என நம்புகிறோம். அதற்காக பெருமாள் காட்டும் சிக்னலாக இதை கருதுகிறோம் என்றார். எப்படி பாற்கடலில் வெளிவந்த ஆலகால விஷத்தை விழுங்கியது போல் இந்த கொடிய கொரோனாவும் விழுங்கப்படும் என்றார்.