அமெரிக்கா அதிபர் டிரம்ப்-க்கு சிலை அமைத்து வழிபாடு நடத்திய தீவிர தெலுங்கானா பக்தர் மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சிலை அமைத்து வழிபாடு நடத்திய இந்தியாவின் தெலுங்கானா மாநில தீவிர பக்தர் புஷா கிருஷ்ணா (வயது 33) மாரடைப்பால் இன்று காலமானார்.
டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வருகை தந்திருந்தார். அப்போதுதான் தெலுங்கான மாநிலம் மேடக் மாவட்டம், ஜாங்கோன் பகுதியை சேர்ந்த புஷா கிருஷ்ணா தம்முடைய கொன்னே கிராமத்து வீட்டிலேயே டிரம்ப்-க்கு சிலை அமைத்து வழிபாடு நடத்திய செய்தி வெளி உலகுக்கு தெரியவந்தது.
35 நாட்களில் 10 ஏவுகணைகள் சோதனை.. இந்தியா அதிரடி சாதனை.. சீனாவுக்கு செக்.. இனி வாலாட்டினால்...!
டிரம்ப் குலசாமி
டொனால்ட் டிரம்ப் மீதான ஈர்ப்பால் அவரை குல தெய்வம் போலவே கும்பிட தொடங்கினார் புஷா கிருஷ்ணா. எந்த ஒரு வேலையை செய்யும் முன்பும் டிரம்ப் படத்தை தொட்டு கும்பிட்டுத்தான் தொடங்குவார் புஷா. அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் டிரம்ப்-சாமிக்கா ஒருநாள் உண்ணாவிரதமும் இருப்பாராம் புஷா கிருஷ்ணா.
பெயரே டிரம்ப் கிருஷ்ணா
இதனால் அந்த பகுதியில் டிரம்ப் கிருஷ்ணா என அழைக்கப்பட்டார். அத்துடன் அவரது வீடும்கூட டிரம்ப் வீடு என்றுதான் பெயராகிப் போனது. அந்த வீட்டில்தான் 6 அடி உயரத்துக்கு டிரம்ப் சிலையை அமைத்திருக்கிறார் புஷா கிருஷ்ணா.
டிரம்ப் குடும்பத்துக்கு கொரோனா பாதிப்பு
இதனிடையே டிரம்ப், அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானது முதலே சரியாக சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார் புஷா கிருஷ்ணா. டிரம்ப் குடும்பத்தினரை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என தினமும் கடவுளை வேண்டி வழிபாடுகளையும் நடத்தியிருக்கிறார் புஷா கிருஷ்ணா.
மாரடைப்பால் மரணம்
குறிப்பாக கடந்த 4 நாட்களாக எந்த உணவும் சாப்பிடாமல் டிரம்ப் நலமடைய வேண்டி உண்ணாநோன்பு கடைபிடித்து வந்திருக்கிறார் புஷா. இந்த நிலையில்தான் புஷா கிருஷ்ணாவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து புஷா கிருஷ்ணாவின் உடல் சொந்த ஊரான, டிரம்ப் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ஜாங்கோன் பகுதியில் உள்ள கொன்னே கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. புஷா கிருஷ்ணாவின் மறைவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.