பிஆர்எஸ் மேடையிலேயே ஓப்பனாக பேசிய திருமாவளவன்.. ‘காங்கிரஸ் இல்லாத அணி அமைந்தால்..’ ஆடிப்போன கேசிஆர்!
ஹைதராபாத் : தெலுங்கானா மாநில மக்களுக்காக, தனி மாநிலத்தைச் சாதித்துக் காட்டிய சந்திரசேகர ராவ், இனி இந்திய மக்களுக்காகச் சாதிப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என பெயர் மாற்றம் செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விசிக தலைவர் திருமாவளவன்.
இந்த நிகழ்வில் பேசிய திருமாவளவன், பிரிவினை சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
கேசிஆர், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது கட்சி மேடையிலேயே, காங்கிரஸ் அல்லாத அணி அமைந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார் திருமாவளவன்.
சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி.. டெல்லியில் நாளை தசரா நாளில் அறிவிப்பு வெளியாகிறது
கேசிஆருடன் திருமாவளவன்
சமீப காலமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலுங்கானா முதலமைச்சரும் டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி என தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி நேற்று அறிவித்தார். முன்னதாக, தேசிய கட்சி அறிவிப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்றிருந்தார். நேற்று காலை தெலுங்கானா முதல்வர் மாளிகையில் திருமாவளவன், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தேசிய கட்சியாக மாற்றம்
தெலங்கானா மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தனது கட்சியைத் தேசிய கட்சியாக, பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றி அறிவித்தார். இதற்கான பொதுக்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் கேசிஆருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்.
இனி இந்திய மக்களுக்காக
இந்த மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "இது எனக்குக் கிடைத்த பெருமை. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த சந்திரசேகர ராவுக்கு நன்றி. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரத் ராஷ்டிரிய சமிதியாக உருமாற்றம் அடைந்துள்ளது. தெலுங்கானா மக்களுக்காகத் தனி மாநிலத்தைச் சாதித்துக் காட்டிய சந்திர சேகரராவ், தற்போது இந்திய மக்களுக்காகச் சாதிக்க உள்ளார்.
கேசிஆருக்கு பக்கபலமாக
கேசிஆரின் போராட்டம் தேசிய அரசியலில் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது. மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது கேசிஆர் தனித்துவமான தலைவர். நாட்டு மக்களுக்கு இப்போதைக்கு பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அவசியம். விடுதலை சிறுத்தைகள் கட்சி கேசிஆருக்கு பக்கபலமாக இருக்கும்.
ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும்
இந்தியாவின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் அவரது லட்சியத்தை நான் பாராட்டுகிறேன். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை வீழ்த்த வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தச் செய்துவரும் திட்டங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
காங்கிரஸ் அல்லாத அணி
தற்போதைய காலகட்டத்தில் சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். காங்கிரஸ் அல்லாத அணி அமைந்தால் அது பாஜகவுக்கு ஆதரவாக பயணிப்பதாக அமைந்துவிடும். ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்திட வேண்டிய அவசியம் உள்ளது" எனப் பேசினார்.