ஆளுநர் பதவி காலம் முடிந்தது.. தெலுங்கானா அரசியலில் குதிக்கும் வித்யாசாகர் ராவ்?
ஹைதராபாத்: மகாராஷ்டிரா ஆளுநர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் தெலுங்கானாவில் தீவிர அரசியலுக்கு வித்யாசாகர் ராவ் திரும்பக் கூடும் என கூறப்படுகிறது.
தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் பதவி காலம் முடிவடைவதால் அப்பதவி வகித்த வித்யாசகர் ராவ் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராக பாஜக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதனால் வித்யாசாகர் ராவை முழுமையாக அரசியலில் களம் இறக்க வேண்டும் என்கிற கருத்து நிலவுகிறது.
பொதுவாக ஆளுநர்களாக பதவி வகித்தவர்கள், 75 வயதை கடந்தவர்கள் பாஜகவின் முதியோர் அணியில் சேர்க்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். தற்போது 77 வயதாகும் வித்யாசாகர் ராவையும் பாஜக இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமா? அல்லது கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்ததைப் போல தெலுங்கானா அரசியலில் தமது 2-வது இன்னிங்ஸை ஆடுவதற்கு வித்யாசகர் ராவுக்கு அனுமதி கொடுக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் தெலுங்கானா பாஜக நிர்வாகிகள் சிலர், பொதுவாக மூத்தவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றனர். அவர்களது அனுபவங்கள் எங்களுக்கு பாடங்களாக இருக்கின்றன. இதுதான் பாஜகவின் நடைமுறை என்று பட்டும்படாமலும் கருத்து கூறியுள்ளனர்..