நிம்மிக் குட்டி.. நீ பர்ஸ்ட்.. புஜ்ஜு நீ செகண்ட் .. அம்மு தேர்ட்.. அதிர வைக்கும் ஹைதராபாத் பள்ளி!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி, எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அவர்களது பள்ளிகளுக்கான விளம்பரத்தை தேடிக் கொள்வதற்காக 10, 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை தினசரி நாளிதழ் மற்றும் பேனர்களில் விளம்பரப்படுத்துவர்.
இதன் மூலம் அந்த கல்வியாண்டுக்கான சேர்க்கை அதிகரிக்கும் என்பது அவர்களின் கணக்கு.
குழந்தைகள்
இதை பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகவில்லையே என்ற ஏக்கம் அடைவதும், அந்த குழந்தைகளை பேனரில் உள்ள குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதும் இயல்பான ஒன்றாகும். மேலும் இதை பார்க்கும் சக மாணவர்களே மனதில் குறைப்பட்டு கொள்வதும் நடைபெறும்.
தமிழக அரசு
இதனால் தமிழகத்தில் முதலிடம், சிறப்பிடம் என்ற அறிவிப்பையே மாநில அரசு நிறுத்திவிட்டது. இதனால் பாஸ், பெயில் என்ற 2 கேட்டகரிகள் மட்டுமே இருக்கும். மேலும் மாணவர்களின் புகைப்படங்கள் விளம்பர நோக்கில் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
|
விளம்பரம்
ஹைதராபாத்தில் உள்ள பிரியா பாரதி உயர்நிலைப் பள்ளி வைத்துள்ள பேனரை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்பள்ளி வைத்துள்ள பேனரில் நர்சரி, எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்ற 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு பள்ளியை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
நஞ்சை விதைக்கும் பள்ளி
தற்போது அந்த பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கண்ட மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் பிஞ்சு குழந்தைகள். இவர்களின் புகைப்படங்களை பேனரில் வெளியிடுவதன் மூலம் பேனரில் இடம்பெறாத குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.
விளம்பர நோக்கம்
விளம்பர நோக்கத்துக்காக இந்த குழந்தைகள் நன்கு படிப்பவர்கள், மற்ற குழந்தைகள் நன்கு படிக்கமாட்டார்கள் என்பதை இவர்கள் எப்படி முடிவு செய்தனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது போல் இந்த பள்ளிகள் இயங்க தடை விதிக்க வேண்டும். இவர்களெல்லாம் ஆசிரியர்களே அல்ல, குழந்தை பருவத்தை கொல்பவர்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.