கோவிஷீல்டு : 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர விண்ணப்பம் : சீரம்
கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
ஹைதராபாத்: கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். தடுப்பூசி முதலில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். அதன்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை கொடுக்கும் நடவடிக்கையில் இறங்குவோம் என்று கூறியுள்ளார் பூனவல்லா.
உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வேலை செய்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் 93 லட்சம் பேரை பாதித்துள்ளது. 87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாகியுள்ளன. நவம்பர் 23 ஆம் தேதியன்று அஸ்ட்ராசெனகா தாங்கள் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி 70.4 சதவிகிம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ளது.
"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு
இலக்கு நிர்ணயித்த சீரம்
இது 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். 90 சதவிகிதம் பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் 2021ஆம் ஆண்டில் 300 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவிகிதம் இந்தியாவுக்கும் 50 சதவிகிதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
ஆய்வு செய்த மோடி
இதனிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மோடி தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் சென்ற பிரதமர் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்று கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் முன்னேற்றம் கேட்டறிந்தார்.
தடுப்பூசி பரிசோதனை
இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடி கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா.
கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல்
கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்திய அரசு தற்போதுவரை எங்களிடம் இருந்து எவ்வளவு கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வார்கள் என்ற எழுத்துப்பூர்வ தகவல்கள் இல்லை.
2021 ஜூலைக்குள் தடுப்பூசி
2021 ஜூலை மாதத்திற்குள் இந்திய அரசு எங்களிடம் இருந்து 30 முதல் 40 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கும் என எதிர்பார்க்கிறோம். தடுப்பூசி முதலில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். அதன்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை கொடுக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்.
இந்தியா ஆப்ரிக்கா
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை விநியோகிக்கும் நடவடிக்கையை அஸ்ட்ரா செனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவனித்துக்கொள்ளும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளே எங்களுக்கு முக்கியமான இடங்கள் என்று கூறியுள்ளார் பூனவல்லா.