ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.. இன்றுதான் டிஸ்சார்ஜ் பற்றி முடிவு- அப்பல்லோ அறிக்கை
ஹைதராபாத்: ரஜினிகாந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், ரத்த அழுத்தம் இன்னமும் அதிகமாக இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்றுதான் டிஸ்சார்ஜ் பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்தில் அண்ணாத்த என்ற திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு, கொரோனா நோய் பரவல் ஏற்பட்டதை அறிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார் .
ஆனால் திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.
ரஜினிகாந்த் அட்மிட்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்தத்தில் மிகுந்த வேறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, நேற்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய செய்தி குறிப்பின்படி, ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு ஆகிய இரண்டையும் தவிர்த்து வேறு எந்த பிரச்சினையும் அவருக்கு இல்லை என்றும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடல்நிலையில் முன்னேற்றம்
இந்த நிலையில், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எங்களது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.
கவலைப்பட வேண்டாம்
ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நேற்றைவிட இன்று நிலைமை முன்னேறி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் வேறு எந்த ஒரு கவலை தரக்கூடிய அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீண்டும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இன்று மாலைக்குள் அந்த அறிக்கை கிடைக்கும்.
ஓய்வில் இருக்க அறிவுரை
மிகவும் ஜாக்கிரதையாக ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை உன்னிப்பாக கவனிப்போம். தொடர்ந்து நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தி உள்ளோம். அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடையாது.
டிஸ்சார்ஜ் எப்போது?
மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தத்தின் நிலவரம் ஆகியவற்றை பார்த்துக்கொண்டு டிஸ்சார்ஜ் பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், இன்றும் மருத்துவமனையில் ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், டிஸ்சார்ஜ் பற்றி நாளை காலை முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.