காங், பாஜகவை கலங்கடித்த தனிஒருவன்.. தெலுங்கானா நாயகன் கேசிஆர்!
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்கிறார். தெலுங்கு தேசம் கட்சி முதல் தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி வரை இவர் வகித்த பதவிகள் ஏராளம்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் 88 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏஐஎம்ஐஎம் கட்சியினரே சந்திரசேகர ராவின் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர்.
அந்தளவுக்கு சிறுபான்மையினர் சமூகம் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்துள்ளார். அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
துணை சபாநாயகர்
கே சந்திரசேகர ராவ் இவர் கடந்த 1954-ஆம் ஆண்டு பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்த அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அவர் என்டி ராமாராவ் அமைச்சரவையில் வறட்சி மற்றும் நிவாரணத்துறை அமைச்சராக பணிபுரிந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் மகபூப்நகர், கரீம்நகர், சித்திப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளின் எம்பியாக இருந்தார். கடந்த 2000- 2001 ஆம் ஆண்டு வரை ஆந்திர சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்தார்.
கட்சி தொடக்கம்
இதைத் தொடர்ந்து 2001-இல் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்தும் விலகினார். பின்னர் அதே ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை தொடங்கினார்.
ராவின் டிஆர்எஸ்
ஆந்திரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிக்குமாறு நீண்ட நாட்களாக போராடி வந்தார் சந்திரசேகர ராவ். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தெலுங்கானாவை பிரித்தது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய வாக்குகளை பெற்ற கட்சியாக உருவெடுத்தது ராவின் டிஆர்எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி).
2015-இல் தொடக்கம்
ஜோதிடத்தில் நிறைய ஈடுபாடு கொண்ட ராவ் பல்வேறு சாமியார்களின் அறிவுரையின் படி அதிர்ஷ்டமான எண்ணில் பதவியேற்றார். டிஆர்எஸ் தலைவராக 8 முறை தேர்வு செய்யப்பட்டார். ஏழை எளியோருக்கு இரு படுக்கை அறையுடன் கூடிய வீடு இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கினார்.
வரலாற்று சாதனை
இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் போதிலும் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை மீண்டும் சந்தித்தார். இதில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.