ஹைதராபாத் தேர்தல்.. கத்துகிட்ட மொத்த வித்தையையும் பாஜக இறக்கி பார்த்தும் முடியல.. டிஆர்எஸ் அபாரம்
ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், ஒரு சட்டசபை தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்தும் பாஜக பெரிய வெற்றியை பெற முடியவில்லை.
தற்பதைய நிலையில், ஆளும் டிஆர்எஸ் 30 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 16 தொகுதிகளில் வென்றுள்ளது, ஓவைசி கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 65 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2வது இடத்தில் பாஜக 41 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. ஓவைசி கட்சி 37 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலை (4 வார்டுகள்) ஒப்பிடுகையில் பாஜக அதிக அளவு இடங்களை கைப்பற்றி உள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி பாஜக 43 வார்டுகளில் முன்னிலை வகித்தது. மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. ஆனால் இது தபால் ஓட்டு என்பதுதான் கவனிக்க வேண்டியது. எனவே பிறகு நிலைமை மாறியது.
ஹைதராபாத் தேர்தல் இவிஎம் முறையில் நடக்கலை.. வாக்கு சீட்டுதான்.. 'அப்படியும்' மண்ணை கவ்விய காங்கிரஸ்
கடந்த கால நிலவரம்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 99 இடங்களை வென்று அபாரமாக வெற்றி வாகை சூடியது. அசாதுதீன் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி, 44 வார்டுகளை வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பாஜக அப்போது 4 வார்டுகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 வார்டுகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றிருந்தன.
பாஜக முன்னேற்றம்
வெறும் நான்கு வார்டுகளில் வென்ற பாஜக ஐந்து வருடங்களில் வளர்ச்சியடைந்து, இப்போது 2வது இடத்தை பிடிக்க போராடி வருகிறது. பெருநகர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல், பாஜகவால் ஒரு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகிய மூன்று முக்கியமான ஸ்டார் பிரச்சாரகர்கள், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பாஜக கொடுத்த முக்கியத்துவம்
பொதுவாக ஒரு சட்டசபை தேர்தலில், அல்லது லோக்சபா தேர்தலில், இது போன்ற தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் மாநகராட்சி தேர்தல் போன்ற உள்ளாட்சி தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் நேரில் வந்து பிரச்சாரம் செய்தார் என்றால் பாஜக எந்த அளவுக்கு இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் வழக்கம்போல சோம்பல் முறித்துக் கொண்டுதான் இருந்தது.
ஹைதராபாத் முக்கியம்
பாஜகவின் முயற்சிக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் 24 தொகுதிகள் ஹைதராபாத் நகரத்தில் மட்டும் அமைந்து உள்ளன. அதாவது ஐந்தில் ஒரு பங்கு தொகுதி தலைநகரில் உள்ளது. அது மட்டுமில்ல, மொத்தம் உள்ள 17 லோக்சபா தொகுதிகளில் 5 லோக்சபா தொகுதிகள் ஹைதராபாத் நகரத்தில்தான் அமைந்து உள்ளன. எனவே ஹைதராபாத்தில் வெற்றி பெறுவது மொத்த தெலுங்கானாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பாஜக நன்கு உணர்ந்து தான் திட்டமிட்டு காய் நகர்த்தி உள்ளது.
கொடி நாட்டிய பாஜக
சமீபத்தில் 11 மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது அல்லவா.. அப்போது தெலுங்கானாவில் துப்பாக்கா தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ உயிரிழந்ததால் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு பக்கம் முதல்வர் சந்திரசேகரராவ் மற்றொரு பக்கம் அவரது உறவினர் என இரு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின், உயர்மட்டத் தலைவர்களின் தொகுதிகளுக்கு நடுவே அமைந்தது துப்பாக்கா தொகுதி. அப்படியான இரும்புக் கோட்டைக்குள் புகுந்து காவி கொடியை பறக்க விட்டது பாஜக.
இரு துருவ அரசியல்
இதோ இப்போது ஹைதராபாத்திலும், ஆழமாக கால் பதிக்க முயன்றுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலை போலவே அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு வகையில் பாஜக வாக்கு வங்கியை உருவாக்க உதவியுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்தி ஓவைசி போலவும், பிற சமுதாயத்தினருக்கு பாஜக என்பதுபோலவும் இருதுருவ அரசியல் இந்த மாநகராட்சித் தேர்தலில் முன்னெடுக்கப்பட்டது.