இன்னொரு பெண்ணுடன் குடித்தனம்.. ஏமாற்றிய கணவனை அடித்து உதைத்து கட்டி இழுத்து சென்ற மனைவி!
ஹைதராபாத்: மனைவியை துரத்திவிட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை, மனைவியும் அவரது உறவினர்களும் சாலையில் இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்து போலீசிடம் அழைத்து சென்றனர்.
தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெட்டா போன்கூர் கிராமத்தைச் சேர்ந்த கொண்டா சம்பத் கரீம்நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவருக்கும் கடந்த அதே பகுதியில் உள்ள மனகந்தூர் மண்டலத்தின் குடூரைச் சேர்ந்த பாக்யலட்சுமி என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இவர் தன் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதன்பிற்கு தன்னுடன் வணிக வளாகத்தில் வேலைபார்த்து வந்த வேறு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அத்துடன் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பத்தின் மனைவி தனது குடும்பத்தினருடன் நேராக கணவனின் வீட்டுக்கு சென்றார். அங்கு சம்பத்தை ஆவேசத்துடன் அடித்து துவைத்தார் மனைவி. அதன்பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து, செருப்பு, விளக்குமாற்றால் அடித்து, கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பத்திடம் நடத்திய விசாரணையில் ஏற்க மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பெண்களும் தனித்தனியே அளித்த புகாரை ஏற்ற போலீசார், சம்பத்திடம் விசாரித்து வருகிறார்கள்.