பிரிட்டனில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா உறுதி... ரயில் பயணத்தால் பலருக்கு கொரோனா பரவல்?
அமராவதி: அதிகாரிகளிடம் இருந்து தப்பி, ரயிலில் பயணித்த பெண்ணுக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பரவல், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய கொரோனா வகையை உறுதி செய்தனர்.
இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்பதால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்திற்குத் தடை
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளன. இருப்பினும், இந்தத் தடை உத்தரவிற்கு முன்னால் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை சுமார் 33 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பினர். அவர்களில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர பெண்ணுக்கு கொரோனா
பிரிட்டனில் ஆசிரியராகவுள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அங்கிருந்த அதிகாரிகளிடம் இருந்து தப்பிய அவர், தனது மகனுடன் ஆந்திர எக்ஸ்பிரஸ் மூலம் அமராவதி சென்றுள்ளார். அமராவதியிலிருந்து அதிகாரிகளிடம், தன்னை வீட்டுத் தனிமையில் இருக்கவே டெல்லியில் சுகாதாரத் துறையினர் பரிந்துரைத்ததாகக் கூறிவிட்டு, தனது சொந்த ஊரான ராஜமஹேந்திரவரத்திற்கு சென்றுள்ளார். அப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது குறித்த தகவல்களை டெல்லி அதிகாரிகள் அளித்ததைத் தொடர்ந்து, ராஜமஹேந்திரவரத்தில் அவரை சுகாதாரத் துறையினர் பிடித்துத் தனிமைப்படுத்தினர்.
உருமாறிய கொரோனா
பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண் மற்றும் அவரது மகனிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தேசிய வைராஜி மையத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் பிரிட்டனிலிருந்து திரும்பிய அப்பெண் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அப்பெண் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்ததால், அவருடன் பயணித்தவர்கள் குறித்த தகவல்களையும் சுகாதாரத் துறையினர் சேகரித்து வருகின்றனர். இருப்பினும், அவரது மகனுக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா
இந்தியாவில் தற்போது வரை பெங்களூருவைச் சேர்ந்த இருவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர், புனே மற்றும் அமராவதியில் ஒருவர் என மொத்தம் ஏழு பேருக்கு இந்தப் புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனிலிருந்து ஆந்திர திரும்பியவர்களில் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, அவர்களில் யாரேனும் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற ஆய்வு நடைபெற்று வருவதாகவும் மாநிலத்திலுள்ள நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 16,432 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்ந்துள்ளது. அவர்களில் 1.47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.