இவர்தான் தென்னகத்தின் யோகி ஆதித்யநாத்.. தெலுங்கானாவில் பாஜகவிற்காக பரியேறும் பரிபூர்ணானந்தா!
பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா அம்மாநில தேர்தலில் முக்கிய உறுப்பினராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
ஹைதராபாத்: பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா அம்மாநில தேர்தலில் முக்கிய உறுப்பினராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய உறுப்பினர் என்றால், பாஜக தெலுங்கானாவில் வெற்றிபெறும்பட்சத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இதில் தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா முக்கிய வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
யார் இவர்
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது காக்கிநாடாவில் மடம் நடத்தி வருகிறார். எல்லா சாமியார்கள் போலவே இவருக்கும் பெரிய பக்தர்கள் படையும் அரசியல் துணையும் இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் துணை என்றால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பரிபூர்ணானந்தாவை சந்தித்து வாழ்த்து பெறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்.
என்ன செய்தார்
இந்த நிலையில் இவர் தற்போது பாஜகவில் இணைந்து இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நேரடியாக அமித் ஷாவை பார்த்து இவர் பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர்களை வரிசையாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இணைந்தார்
இவர் பாஜகவில் இணைந்ததே கொஞ்சம் சுவாரசியமான விஷயம்தான். கடந்த ஜூலை மாதம் இவர் இந்து மதம் குறித்து ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது மற்ற மதங்களை தவறாக பேசியதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் இவர் கைதாவதற்குள் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில், இந்த வழக்கிற்குபின்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு இவரை அழைத்து பேசியது.
பாஜகவின் நம்பிக்கை
அதன்பின்பே இவர் கட்சியில் சேர்ந்தார். தெலுங்கானாவில் மாநில பாஜக தலைவரையே இவருக்காக கழட்டிவிடும் நோக்கத்தில் பாஜக இருக்கிறது. இவரை பாஜக தென்னகத்தின் யோகி ஆதித்யநாத் என்றுதான் அழைக்கிறது. இவரது பிரச்சாரமும் அப்படித்தான் உள்ளது. காங்கிரஸ் கிறிஸ்துவர்களின் ஆட்சியையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இஸ்லாமியர்களின் ஆட்சியையும் கொண்டு வர பார்க்கிறது என்று இவர் வெளிப்படையாக இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
முதல்வரா?
இதனால் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது. ஆம் பாஜக தெலுங்கானாவில் வெற்றிபெறும்பட்சத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி எப்படி கடைசி நேரத்தில் முதல்வர் ஆனாரோ அதேபோல் இவரையும் முதல்வராக்க திட்டம் வைத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.