ஏமன்ட்டி.. அவரு நாட் ரீச்சபிள்னு உன்னாரு.. பவாரை பரிதவிக்க விட்ட ஜெகன் மோகன்.. காங்கிரசுக்கு அல்வா?
Recommended Video
ஹைதராபாத்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இணைய, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சம்மதம் இல்லை என்று தெரிகிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய 4 முனைப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் பலவுமே, அங்கு சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி மோதல் மட்டுமே இருப்பதை வெளிச்சம் போட்டுவிட்டன.
காங்கிரசும், பாஜகவும், ஆந்திராவில் வெறும் பார்வையாளர் வரிசையில்தான் இருக்கின்றன என்பதற்கு எக்ஸிட் போல்கள் சான்று.
தேர்தல் முடிவு வந்த கையோடு இதைத்தான் செய்யனும்.. அகிலேஷும் ஆம் ஆத்மியும் பேசி எடுத்த முடிவு!
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் டாப்
நியூஸ்18 சேனல் வெளியிட்ட எக்ஸிட் போல் கணிப்புப்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 13 லோக்சபா தொகுதிகளையும், தெலுங்கு தேசம் 11 தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தியா டுடே ஆக்சிஸ் போல் கணிப்புப்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18-20 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் 4-6 தொகுதிகளையும் வெல்லும்.
பெரும் சக்தி
ரீபப்ளிக்-சி ஓட்டர் கருத்துக் கணிப்படி, தெலுங்கு தேசத்திற்கு 14 தொகுதிகளும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளும் கிடைக்கலாம். இவ்வாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவிட்டதை அனைத்து எக்ஸிட் போல்களும் அறுதியிட்டு சொல்லிவிட்டன.
கிங் மேக்கர் ஜெகன் மோகன் ரெட்டி
இதையடுத்து, தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில், கிங் மேக்கராகும் வாய்ப்பு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அமைந்துள்ளது. எனவே, இப்போதே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். அதன் ஒரு பகுதியாக, ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் அழைக்க முற்பட்டுள்ளார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். ஆனால், அவர் பக்கத்தில் இல்லைங்க என்றுதான் பதில் கிடைத்துள்ளது. இதுவரை ஜெகன் மோகன் ரெட்டி மரியாதைக்காக கூட சரத் பவாரை திரும்ப போனில் அழைக்கவில்லையாம்.
பாஜகவுடன் நெருக்கம்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை பாஜக வளைக்க திட்டமிட்டுள்ளது. தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவை பெறலாம் என்பது பாஜக தலைவர்கள் திட்டம். பதிலுக்கு, அமைச்சரவையில் இடம் வழங்க ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டிக்கு தூது அனுப்பிவிட்டது பாஜக. எனவேதான், சரத் பவார் போன் அழைப்பை, ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் பக்கம் இருப்பதும், இந்த புறக்கணிப்புக்கு காரணம். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தனது முடிவை அறிவிக்கலாம் என அமைதிகாத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.