ஜெயேந்திரரை கொலைகாரர் என விமர்சித்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன்!
டெல்லி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை, கொலைகாரர் என்று பொருள்படும் வகையில் விமர்சனம் செய்து டிவிட் செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
சட்டீஸ்கரில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நக்ஸலைட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியான, அலெக்ஸ் பால் மேனன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், தமிழில் வெளியாகும் பிரபல வார இதழில் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் ஆர்வமுடன் செயல்படுபவர்.
இவர் நேற்று டிவிட் செய்த ஒரு விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பெத்கர் - பெரியார் மாணவர் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த மேனன், ஏற்கனவே ஐஐடியிலுள்ள கோயிலுக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் வந்தது தொடர்பான இ-மெயில் காப்பியை வெளியிட்டு
"கொலைகாரர்களும் அவர்களது வாழ்த்துகளும் வரவேற்கப்படும். ஆனால் பேச்சு சுதந்திரமும், அம்பேத்கரும், பெரியாரும் அல்ல. சென்னை ஐ.ஐ.டி. கடக்க வேண்டிய தூரம் அதிகம்" என்று ட்விட் செய்திருந்தார்.
Murderers n their blessings r welcome. Not freedom of speech Ambedkar n Periyar.way to go IITM pic.twitter.com/UysCQEEqHE
— alex paul menon (@alexpaulmenon) June 7, 2015
சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கொலை வழக்கில் அவருக்குள்ள தொடர்பு கோர்ட்டில் நிரூபணமாகாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில்தான் மேனனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை கொலைகாரர் என்று கூறியதது சரியில்லை என்று டிவிட்டரில் பலரும் பின்னூட்டம் செய்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரியே, கோர்ட் ஆர்டரை மதிக்கவில்லை என்பதாக இந்த விமர்சனம் பொருள்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. சிலர் மேனனின் மதப் பின்னணிதான் இதுபோன்ற கருத்துக்கு காரணம் என்று பின்னூட்டம் இட்டுள்ளனர்.
Amazed to see how religion,politics n cinema creates FANS/FOLLOWERS who can't take a word of criticism..We need to grow a lot in maturity..
— alex paul menon (@alexpaulmenon) June 7, 2015
இதுகுறித்து மீண்டும் டிவிட் செய்த மேனன், அரசியல், சினிமா, ஆன்மீக ஃபாலோவர்கள், விமர்சனங்களை தாங்க முடியாதவர்களாக உள்ளனர். பக்குவப்பட நாம் இன்னும் வளர வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.