காளஹஸ்தியில் மோடி வழிபாடு: நாயுடு, பவன் கல்யாணும் தரிசனம்
திருப்பதி / ஸ்ரீகாளஹஸ்தி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேவா கட்சித்தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் ஆகியோர் திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மூலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தனர்.
திருப்பதியில் புதன்கிழமை இரவு பாஜக மற்றும் தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஆதித்யா பிர்லா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
ஏழுமலையான் தரிசனம்
வியாழக்கிழமை காலை 7.25 மணியளவில் விஐபி பிரேக் தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் பாஜ தேசிய தலைவர்கள் வெங்கய்ய நாயுடு, பிரகாஷ் ஜவ்டேக்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர்.
மோடிக்கு வரவேற்பு
அவர்களை ஏழுமலையான் கோயில் ஜீயர், தலைமை செயல் அலுவலர் எம்.ஜி. கோபால் ஆகியோர் வரவேற்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கினர்.
மோடிக்கு பிரசாரம்
பின்னர் கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் நரேந்திர மோடிக்கு தீர்த்த பிரசாதங்கள், சுவாமி படங்களை வழங்கினர்.
மோடி, சந்திரபாபு நாயுடு, பவன்
கோயிலுக்கு வெளியே நரேந்திரமோடி, சந்திரபாபுநாயுடு, பவன்கல்யாண் ஆகிய 3 பேரும் ஒன்றாக வருவதை பார்த்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு அவர்களிடம் சென்றனர். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்து கொண்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி
நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்துக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்குச் சென்று வாயுலிங்கேங்வரரை தரிசனம் செய்தார்.
மோடிக்கு வரவேற்பு
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
சிறப்பு தரிசனம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த நரேந்திரமோடிக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவிலுக்குள் செல்லும் நரேந்திரமோடியுடன் குறிப்பிட்ட நபர்களே அனுமதிக்கப்பட்டனர்.
பரிகார பூஜை
கோவிலில் நரேந்திர மோடி ராகு-கேது பரிகார பூஜை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் அவர் கோவிலுக்குள் இருந்தார். அதுவரை பக்தர்கள் யாரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
பட்டு வஸ்திரம்
தரிசனத்திற்குப் பின்னர் நரேந்திரமோடிக்கு பட்டு வஸ்திரம், சுவாமி அம்பாள் இணைந்த படம் வழங்கப்பட்டது. மோடி அதனை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்.
கோவில் வலம்
தொடர்ந்து பட்டு வஸ்திரம் அணிந்தவாரே நரேந்திரமோடி, பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கோவிலை வலம் வந்தனர்.
2 மணிநேரம் ரத்து
இதற்காக, பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு 2 மணிநேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் வெள்ளைநிற சீருடை அணிந்து பணிக்கு வர கோவில் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது
ராகு கேது பூஜை நிறுத்தம்
காளஹஸ்தி கோவிலில் ஆண்டு தோறும் மகாசிவ ராத்திரியன்று தான் ராகு- கேது பூஜை நிறுத்தப்படுவது உண்டு. மற்ற நாட்களில் பிரதமர், முதல்வர்கள் தரிசனத்துக்கு வந்தால் கூட பூஜைகள் நிறுத்தப்படாது. ஆனால் நேற்றுதான் முதல் முறையாக பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்காக ராகு-கேது பூஜை நிறுத்தப்பட்டது
பக்தர்கள் சிரமம்
இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். மாடவீதியில் கூட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைப் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோவில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திர ரெட்டி தெரிவித்தார்.