வரலாறு காணாத ஜம்மு காஷ்மீர் வெள்ளம் - முப்படைகளும் மீட்புப் பணியில்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய பாதுகாப்புப்படையின் முப்படைகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இவை முக்கியப் பங்கும் வகிக்கின்றன.
கடந்த 2 வாரமாக முப்படையினரும் மிகவும் தீவிரமாகவும், தீரமாகவும் மீ்ட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினர்தான் இதில் மிக முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள கடைசி நபரை மீட்கும் வரை தொடர்ந்து ஈடுபடுவோம், தொய்வில்லாமல், ஓய்வில்லாமல் ராணுவம் தனது பணியைச் செய்யும் என்று ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளார்.
ராணுவத்தின் உதவிக்கரம்...
மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவத்தின் பங்கு குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பி.கே.பாண்டே கூறுகையில், மக்கள் அவ்வப்போது கடவுளையும், டாக்டர்களையும் மறந்து விடுவார்கள். ஜம்மு காஷ்மீரிலும் அப்படித்தான். சிக்கலான சமயங்களில் எல்லாம் ராணுவம்தான் அங்குள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும். இப்போதும் அப்படித்தான்.
நிவாரண முகாம்கள்...
தற்போது அங்கு மட்டும் ராணுவம் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். பல்வேறு நிவாரண முகாம்களை ராணுவம் அமைத்துள்ளது. அதில்தான் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாராட்டுக்குரியது...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தையும் ராணுவம்தான் செய்து தருகிறது. இது பாராட்டுக்குரியது என்றார்.
சிறந்த பயிற்சி தேவை...
ஓய்வு பெற்ற இன்னொரு ராணுவ அதிகாரியான ஆர்.டி.பாலி கூறுகையில், தேசிய பேரிடர் நிர்வாகப் படையினர் உரிய முன்னேற்பாடுகள், பயிற்சிகளுடன் இல்லை என்பதை இப்போது அறிய முடிகிறது. இன்னும் அவர்கள் சிறந்த பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
நிபுணத்துவம் பெற்ற வீரர்கள்...
வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து ராணுவத்தினருக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். இதுபோன்ற சமயங்களில் தேர்ச்சி பெற்ற ராணுவ வீரர்கள் அரிய உயிரைக் காக்கும் உயரிய பணியில் ஈடுபட்டு பல நூறு மக்களைக் காக்கிறார்கள் என்றார்.
மீட்புப் பணியில் விமானங்கள்...
தற்போது ஜம்மு காஷ்மீரில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படையின் 26 ஹெலிகாப்டர்களும், பிற விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசியப் பேரிடர் நிர்வாகப் படையினரின் 6 குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் 200 கமாண்டோ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.