மோசமான பராமரிப்பு.. அசாமில் 1000 டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகள் பாழ்!
கவுகாத்தி : அசாமில் அரசு மருத்துவமனை ஒன்றில் சரியான முறையில் பராமரிக்காததால் 100 மருந்து குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த 1000 டோஸ் கோவிட் மருந்துகள் வீணாகி உள்ளன.
அசாமில் சசார் மாவட்டத்தில் உள்ள சில்சர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் இருந்துள்ளன. இதனால் 1000 டோஸ் மருந்துகள் பயன்படுத்த முடியாமல் வீணாகி உள்ளன.
இந்த தகவல் ஜனவரி 16 அன்று தான் மாநில சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1000 டோஸ் மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ள தகவல் ஜனவரி 19 இரவு தான் வெளியே கசிந்துள்ளது.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போதிய பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். தடுப்பூசி மருந்துகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை. இது பற்றி ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை யாருடைய அஜாக்கிரதையினால் இது நடந்திருந்தால் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மாவட்ட தடுப்பு மருந்து பிரிவு அதிகாரி அருண் தேப்நாத் கூறுகையில், மருந்துகள் பொதுவாக 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் சில்சர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்பநிலையானது மைனஸ் 5 முதல் 6 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் சென்றுள்ளது. அதனால் தான் மருந்துகள் பாதி உறைந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக அசாம் தேசிய சுகாதார கழகமும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு உரிய பதிலளிக்க தான் தயாராக உள்ளதாக மருத்துவமனை தலைமை சுகாதார அதிகாரி பிகே ராய் தெரிவித்துள்ளார்.