மூன்று ஆண்டுகளில் 1,10,333 பலாத்கார வழக்குகள் பதிவு.. மத்திய அமைச்சர் திடுக் தகவல்
2014-2016 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என மத்திய அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரியவந்துள்ளது.
டெல்லி: 2014-2016 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என மத்திய அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிரிட்டன் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் பெண்களுக்கு கொஞ்சமும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்தது.
மல்லுக்கட்டிய மத்திய அரசு
ஆனால் இதனை ஒத்துக்கவே இல்லை மத்திய அரசு. இந்த ஆய்வறிக்கை பொய் எனக்கூறி மல்லுக்கட்டியது மத்திய அரசு.
அதிர்ச்சி அளித்துள்ள பதில்
இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான நாடாளுமன்ற கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்
அதாவது மத்திய அமைச்சர் அளித்துள்ள பதிலில், 2014-16 ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.
2016ல் 38947 வழக்குகள்
அவற்றில் கடந்த 2016ம் ஆண்டில் 38,947 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 34,651 வழக்குகளும் மற்றும் 2014ம் ஆண்டில் 36,735 வழக்குகளும் பதிவாகி உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் குற்றவழக்குகள்
இதேபோன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கையில் கடந்த 2016ம் ஆண்டில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 வழக்குகளும், 2014ம் ஆண்டில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 457 வழக்குகளும் பதிவாகி உள்ளன என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு எத்தனை?
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நாடு முழுவதும் 10 பலாத்காரங்கள் என்றாலும் கூட மூன்று ஆண்டுகளுக்கு அதிகளவாக 11 ஆயிரம் வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன?
பலர் வெளியில் சொல்வதில்லை
இதனிடையே இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் பலர் எதிர்காலத்தை கருதியும் குடும்ப கவுரவத்தை காப்பாற்றவும் ஊராரின் ஏச்சு பேச்சை தவிர்க்கவும், உயிருக்கு பயந்தும் வெளியில் சொல்லாமலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமலும் மூடி மறைத்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.