காற்று மாசால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் சாவு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் காற்று மாசால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் காற்று மாசால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் வாகனங்கள் பயன்பாடு மற்றும் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசு அதிகரிப்பதோடு மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளும் அதிகமாகி வருகிறது.
கிரீன்பீஸ் அமைப்பு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் உட்பட 168 நகரங்களில் காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தியது. ஆன்லைன், நாடு முழுவதும் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மாசால் 10 லட்சம் பேர் பலி
இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவுகளை கிரீன் பீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் காற்று மாசால் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புகையிலை மரணத்தைவிட சிறிதளவே குறைவு
காற்று மாசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புகையிலை பயன்பாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் ஒரே ஒரு பகுதி தான் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
படிம எரிபொருட்களே காரணம்
தென்னிந்திய நகரங்களில் மட்டுமே காற்று மாசுபாடு குறைவாக இருப்பதும் கிரீஸ்பீஸ் ஆய்வில் வெளிவந்துள்ளது. படிம எரிபொருட்களே காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு முதலிடம்
மேலும் இந்தியா முழுவதும் காற்று மாசும் அதிகம் உள்ள முதல் 20 நகரங்களின் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மிக அதிக காற்று மாசு கொண்ட மாநிலம் என டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உச்சக்கட்ட காற்று மாசு
2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2016 பிப்ரவரி மாதம் வரை டெல்லி கடுமையான காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்போது உலக சுகாதார மையம் அனுமதித்துள்ள அளவை விட 13 மடங்கு அதிக காற்று மாசு இந்ததாகவும் கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களே அதிகம்
அதற்கு அடுத்தபடியாக வரிசையே காசியாபாத், அலகாபாத், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி, ஹரியானாவின் ஃபரிதாபாத், ஜார்கண்டின் ஜாரியா, ராஜஸ்தானின் ஆல்வார், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி, குசண்டா, பஸ்டகோலா, உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், பீகார் மாநிலத்தின பாட்னா ஆகிய நகரங்கள் 2, 3 என வரிசையில் இடம் பிடித்துள்ளன.
எச்சரிக்கை மணிக்கான நேரம்
காற்று மாசுபாட்டால் நாடு ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் இப்போதே எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட வேண்டும் என்றும் கீரின்பீஸ் ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.