"ரூ.1200 கோடி..!" தனியாக வந்த படகு.. உள்ளே பார்த்தால் மூட்டை மூட்டையாக.. அதிர்ந்து போன அதிகாரிகள்
கொச்சி: இந்திய கடற்கரையை நோக்கி வந்த படகை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, உள்ளே இருந்ததைக் கண்டு என்சிபி அதிகாரிகளே ஒரு நிமிடம் வாயடைத்துப் போய்விட்டனர்.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாகப் போதைப்பொருள் கிடைப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இந்தப் போதைப்பொருட்கள் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கஞ்சா போதை பொருள்.. அப்போ டாஸ்மாக் மதுபானம் என்ன
தனியாகச் சென்ற படகு
கடந்த வியாழக்கிழமை அரபிக் கடலில் தன்னந்தனியாக படகு ஒன்று வந்து கொண்டு இருந்து உள்ளது. அதில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து என்சிபி அதிகாரிகளும் இந்தியக் கடற்படையினரும் இணைந்து அந்தக் கப்பலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். முதலில் அந்தக் கப்பலில் இருப்பதைக் கண்டு என்சிபி அதிகாரிகளே மிரண்டு போய்விட்டனர்.
200 கிலோ ஹெராயின்
அந்த சொகுசு கப்பலில் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் இருந்ததை போலீார் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் கூறுகையில், "இந்த விவகாரத்தில் ஆறு ஈரான் நாட்டினரைப் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளோம். கைப்பற்றப்பட்ட படகையும் ஹெராயினையும் மட்டஞ்சேரி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தோம்" என்றார்.
தேள், டிராகன்
மேலும், இது தொடர்பாக என்சிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த போதைப்பொருள் பாக்கெட்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கடத்தல் காரர்களின் அடையாளங்கள் இருந்தன. இப்படி மொத்தம் 200 பாக்கெட்கள் அங்கு இருந்தன. சில பாக்கெட்டுகளில் தேள் முத்திரையும், மற்றவற்றில் 'டிராகன்' முத்திரையும் இருந்தன. நீர் புகாதவாறு ஏழு அடுக்கு பேக்கிங் செய்து இருந்தனர். முதற்கட்ட விசாரணையில் இது ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
இலங்கை கப்பல்
பாகிஸ்தானில் இருந்து வந்த போது தான் இதை என்சிபி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்தக் கப்பல் இந்தியக் கடல் வழியாகச் சென்ற போது பிடித்தோம். நடுக்கடலில் வைத்து இந்த சரக்கை இலங்கை கப்பலுக்கு மாற்றுவதே இவர்கள் திட்டம். அந்த இலங்கை கப்பலைப் பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அதைப் பிடிக்க முடியவில்லை" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
தப்ப முயற்சி
இந்திய அதிகாரிகள் கப்பலைச் சுற்றி வளைத்த போது, கடத்தல்காரர்கள் கடலில் குதித்துத் தப்பிக்க முயன்றதாகவும், சரக்குகளைக் கடலில் வீச முயன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆப்கானிஸ்தான் ஹெராயின் இந்தியாவுக்குள் கடத்தப்படுவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து உள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிகரிப்பு
இந்தச் சம்பவம் வியாழக்கிழமையே நடந்த போதிலும், இது தொடர்பான தகவல்களை என்சிபி அதிகாரிகள் வெள்ளி இரவு தான் வெளியிட்டனர். சமீப ஆண்டுகளில் நடுக்கடலில் இந்த அளவுக்குப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த விவகாரத்தில் என்சிபி அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.