1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் லீக்கானது.. ஆந்திர அரசு இணையத்தில் நடந்த பெரிய முறைகேடு!
ஆந்திர அரசின் வீட்டு வசதி வாரிய இணையதள பக்கத்தில் 1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் முறையின்றி வெளியாகி இருக்கிறது.
ஹைதராபாத்: ஆந்திர அரசின் வீட்டு வசதி வாரிய இணையதள பக்கத்தில் 1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் முறையின்றி வெளியாகி இருக்கிறது. பொதுவில் எல்லோரும் பார்க்கும் வகையில் இந்த தகவல்கள் வைக்கப்பட்டு இருந்தது.
யார் வேண்டுமானாலும் ஆந்திராவில் இருக்கும் இந்த 1.3 பேரின் விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும். ஒரு அரசு இணையதளம் இப்படிபட்ட முறைகேட்டை செய்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்பட்டதில் இருந்து இந்த பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார் தகவல்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
பெரிய சுவர்
சில நாட்களுக்கு முன் ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த சுவர் இருக்கும் கட்டிடத்திற்குள்தான் ஆதார் தகவல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார் தகவலை யாரும் திருட முடியாது என்றும் கூறியது. ஆனால் தற்போது ஆதார் தகவல்கள் அரசு இணையத்தால் மூலமாகவே வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் மோசம்
இந்த நிலையில்தான் தற்போது ஆந்திர அரசின் இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக 1.3 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள், வீட்டு வசதி வாரியத்தின் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவர்கள் என்ன ஜாதி, என்ன படித்துள்ளார், என்ன தொலைபேசி, என்ன விலாசம் என்று எல்லா விவரமும் அதில் பொதுவில் பார்க்கும்படி இடம்பெற்று இருக்கிறது.
மோசம்
இது பல மோசமான விஷயங்களுக்கு உதவும். இதன் மூலம் ஆந்திராவின் ஒவ்வொரு பகுதியிலும் எந்த ஜாதியினர் இருக்கிறார்கள் என்று எளிதாக இந்த இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்தல் சமயத்தில் இது கட்சிகளுக்கு அதிகம் உதவும். மக்களை ஜாதி வாரியாக பிரிக்கவும் இது அதிக அளவில் உதவும் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தனியார் எடுக்க முடியாது
இந்த விஷயம் பெரிய பிரச்சனை ஆனதை அடுத்து அந்த இணையதள பக்கத்தில் இருந்து தற்போது ஆதார் தகவல்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் என்னதான் வெளியே வந்தாலும், அதை தனியார் பயன்படுத்த முடியாது என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அரசாங்க அமைப்பே இப்படி தகவல்களை பொதுவில் வெளியிடுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.