ரயில்வே திட்டங்களுக்காக 1,36,000 கோடி… மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு
ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலதனத் திட்டங்களுக்காக 1,31,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
2017-18ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ரயில்வே பாதுகாப்பு, பயணிகள் பாதுகாப்பு, மூலதனத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களில் அதிக முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
மேலும், ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் 500 ரயில் நிலையங்களில் லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் செய்து தரப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி செய்து தர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ரயில்வே துறையின் மூலதன திட்டங்களுக்காக 1,31,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.