குஜராத் சரக்கு கப்பலில் ரூ3,500 கோடி மதிப்பிலான 1,500 கிலோ ஹெராயின் பறிமுதல்
குஜராத் சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ3,500 கோடி மதிப்பிலான 1,500 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் கடற்பரப்பில் சரக்கு கப்பலில் ரூ3,500 கோடி மதிப்பிலான 1,500 கிலோ ஹெராயினை நடுக்கடலில் கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். இக்கடத்தலில் ஈடுபட்ட சரக்கு கப்பல் கேப்டன் சுப்ரித் திவாரி மற்றும் அவரது சகோதரர் சுஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் கடற்பரப்பில் சரக்கு கப்பல்கள் மூலமாக பெருமளவு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் குஜராத் கடற்பரப்பில் நடுக்கடலில் சரக்கு கப்பல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
இச்சோதனையில் சரக்கு கப்பல் ஒன்றில் 1500 கிலோ ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ3,500 கோடி என கூறப்படுகிறது.
இதை கடத்தி வந்த சர்க்கு கப்பல் கேப்டன் சுப்ரித் திவாரி கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த திவாரியின் தம்பியும் பிடெக் மாணவருமான சுஜித்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஜித் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த குஜராத் அதிரடிப் படை பிரிவு போலீசார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.