தானேவில் மின்சார ரயில் தடம் புரண்டது: ஒருவர் பலி, 12 பேர் காயம்
தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கசரா என்ற இடத்தில் இருந்து மும்பைக்கு மின்சார ரயில் ஒன்று இன்று மதியம் கிளம்பியது. அந்த ரயில் டிட்வாலா ரயில் நிலையத்தில் நின்று அதன் பிறகு அம்பிவாலி நோக்கி சென்றது. அப்போது ரயில் திடீர் என்று தடம் புரண்டது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் தவால் லோதா(38) என்ற பயணி பலியானார்.
மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். ரயிலில் கூட்டம் இல்லாததால் பெட்டிகள் தடம் புரண்டதில் கம்பிகள் மீது மோதிய வேகத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.