மின்கசிவு காரணமாக நவி மும்பை ஓட்டலில் தீ விபத்து: ஒருவர் பலி 30 பேர் காயம்
மும்பை: மும்பையில் மூன்று மாடிக் கட்டிட ஓட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவி மும்பையின் வாஷி பகுதியில் ஃபாம் கடற்கரை சாலையில் 26வது செக்டரில் உள்ள மூன்று மாடிக் கட்டிட ஓட்டலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 30 பேர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் 20 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கி ஊழியர்கள் கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஏராளமாக வங்கி ஊழியர்கள் இந்த ஓட்டலில் தங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.