கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு... திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்
அமராவதி: கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறான நேற்று திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பதியில் தெலுங்கு தேச கட்சி மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருமலைக்கு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை திருப்பதி கோவிலில் கூட்டம் அலை மோதியது. அன்று காலை முதல் மாலை வரை மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர் என்றும், இது தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய பதிவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.