காஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவம் குவிப்பு.. விமானங்களில் அனுப்பி வைப்பு.. பின்னணியில் தோவல்?
ஸ்ரீநகர்: தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த திடீர் முடிவாக 10,000 துணை ராணுவப் படையினரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் இரு நாட்களாக தங்கியிருந்து பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி வந்தார். மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை பரிசீலனை செய்தார். அவர் டெல்லி திரும்பிய பின்னர், இத்தனை அதிகமான துணை ராணுவத்தினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங், இந்த துணை ராணுவத்தினரை வடக்கு காஷ்மீரில் நிலைநிறுத்த கோரியுள்ளதாக தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு விமானம் மூலமாக துணை ராணுவத்தினர் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வடக்கு காஷ்மீரில் ராணுவத்தினர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனால்தான் எங்களுக்கு கூடுதல் படைகள் தேவைப்பட்டது. 100 கம்பெனி துணை ராணுவத்தினர் விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர்" என்று தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். ஒரு கம்பெனி என்பது, தலா 100 ராணுவ வீரர்களை உள்ளடக்கியதாகும்.
சமீபத்தில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக சுமார் 40,000 கூடுதல் மத்திய துணை ராணுவப் படையினர் காஷ்மீர் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.