சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
டெல்லி: உலகின் உயரமான போர்முனையான இமயமலையின் சியாச்சின் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவு ராணுவ வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வீரர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கினர். கடந்த 2 நாட்களாக அவர்களை உயிருடன் மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சியாச்சின் பகுதியில் பனிக்கட்டிகளை வெட்டி எடுக்கும் இயந்திரங்களுடன் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் துக்கம்பாறையைச் சேர்ந்த எழுமலை (ஹவில்தார்), மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியை சேர்ந்த கணேசன் (சிப்பாய்). கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனபள்ளியைச் சேர்ந்த ராமமூர்த்தி (சிப்பாய்), தேனி மாவட்டம் குமணண்தொழுவை சேர்ந்த எஸ் குமார் (லான்ஸ் ஹவில்தார்) ஆகியோர் பலியாகியுள்ளனர்.
மேலும் லான்ஸ் நாயக் நாகேஷா (கர்நாடகா), லான்ஸ் நாயக் சுதீஸ் (கேரளா), சிப்பாய் மகேஷா (கர்நாடகா), லான்ஸ் நாயக் ஹனமந்தப்பா (கர்நாடகா), முஷ்டாக் அகமது (ஆந்திரா), சிப்பாய் சூரியவன்சி (மகாராஷ்டிரா) ஆகியோரும் பலியாகியுள்ளனர்.